சென்னை: தெருநாய்களை தத்தெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் கமலி வெளியிட்டார். ஆதரவற்ற மற்றும் தெருநாய்களுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை ஏற்படுத்துவதுடன், அவற்றை பொதுமக்கள் தத்தெடுப்பதை ஊக்குவிப்பதே இந்த டிஜிட்டல் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.
தத்தெடுக்க விரும்பும் பொதுமக்களுக்கு தெருநாய்கள் குறித்த தேவையான தகவல்களை ஒரே தளத்தில் வழங்கும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட உள்ளது.
தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுடன், அவற்றின் நலன் மற்றும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
தெருநாய்களை தத்தெடுக்கும் நடைமுறையை எளிதாக்கி, விலங்குகள் மீது அக்கறை கொண்ட பொதுமக்களை தத்தெடுப்பு நடவடிக்கைகளுடன் இணைக்கும் வகையில் டிஜிட்டல் தளம் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி மூலம் தெருநாய்களுக்கு பாதுகாப்பான குடும்பச் சூழல் கிடைப்பதுடன், விலங்குகள் நலன் தொடர்பான விழிப்புணர்வும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
