வயநாடு: வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் அலுவலக அதிகாரி என போலியாக அறிமுகப்படுத்தி, கேரள எம்எல்ஏ மற்றும் எம்.பி.க்களிடம் பணம் கேட்டு மோசடி செய்ய முயன்ற நபர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரியங்கா காந்தியின் தனிச்செயலாளர் டி.எஸ். ராஜ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், வயநாடு சைபர் கிரைம் போலீஸார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீஸார் தெரிவித்ததன்படி, ஜூலை 6-ஆம் தேதி எலத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வித்யா பாலகிருஷ்ணனுக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்ட நபர், தன்னை பிரியங்கா காந்தியின் டெல்லி அலுவலக அதிகாரி ராஜ்குமார் என அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும், கேரள அமைச்சரவையில் மாற்றம் நடைபெற உள்ளதாகவும், ரூ.3 கோடி வழங்கினால் அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகவும் கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிரியங்கா காந்தியின் டெல்லி அலுவலகத்தை தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியபோது, அந்த அழைப்பு போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அந்த அழைப்பு டெல்லியில் இருந்து வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபரை கண்டறிய தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.