மும்பை: இந்தியாவில் பாலிமர் (பிளாஸ்டிக்) கரன்சி நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி (RBI) தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பாலிமர் தாள்களை வழங்கக்கூடிய உற்பத்தியாளர்களிடம் உலகளாவிய அளவில் ஆர்வ வெளிப்பாடுகளை (Expression of Interest - EoI) கோரி, இந்திய கரன்சி அச்சிடும் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
பாலிமர் நோட்டுகள் தற்போது பயன்பாட்டில் உள்ள காகித நோட்டுகளை விட நீண்ட ஆயுட்காலம் கொண்டவை. மேலும், ஈரப்பதம், கிழிதல் மற்றும் அழுக்கால் எளிதில் சேதமடையாமல் இருப்பதுடன், கள்ளநோட்டு தயாரிப்பை தடுக்கும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கும்.
எனினும், பிளாஸ்டிக் நோட்டுகள் எப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும், எந்த மதிப்புகளில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. பாலிமர் கரன்சி அறிமுகம் தொடர்பான பணிகள் தற்போது முன்னேற்ற நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.