சென்னை:
தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். சில்லறை சந்தைகளில் பல்வேறு அரிசி ரகங்களின் விலை கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பொன்னி, சீரக சம்பா உள்ளிட்ட உயர்தர அரிசி ரகங்களின் விலை அதிகரித்துள்ளது. நெல் கொள்முதல் விலை உயர்வு, அறுவடை காலம் நிறைவடைந்ததால் ஏற்பட்ட வரத்து குறைவு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து குறைந்தது போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் நுண்ணரிசி ரகங்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் அரிசி வரவழைக்கப்படுகிறது. அங்கு ஏற்பட்ட விலை உயர்வின் தாக்கமும் தமிழக சந்தையில் பிரதிபலித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மழை நிலைமை சீரடைந்து புதிய அறுவடை சந்தைக்கு வரத் தொடங்கினால் அரிசி விலையில் நிலைத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதுவரை சில்லறை சந்தைகளில் தற்போதைய விலை நிலவரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.