2030-க்குள் இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு

 

ஆக்லாந்து: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 2030-க்குள் ரூ.35,000 கோடியாக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. இதற்காக 5 ஆண்டு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு மற்றும் இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் நீண்டகால கூட்டாண்மையை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரைவில் முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதன் பலன்களை இரு நாடுகளும் திறம்பட பயன்படுத்த இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • 2030-க்குள் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு.
  • இதற்கான 5 ஆண்டு செயல் திட்டம் உருவாக்கம்.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்கை வலுப்படுத்த ஒப்புதல்.
  • 1982 ஐ.நா. கடல்சார் சட்ட ஒப்பந்தம் (UNCLOS) அடிப்படையில் கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்ய வலியுறுத்தல்.
  • மேற்கு ஆசிய பதற்றம் குறித்து கவலை தெரிவித்து, பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை வலியுறுத்தல்.
  • ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து முழுமையாக மீள வேண்டும் என அழைப்பு.
  • ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பாதுகாப்பு சபை சீர்திருத்தங்களுக்கு இரு நாடுகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த சந்திப்பு, இந்தியா - நியூசிலாந்து உறவை பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Previous Next

نموذج الاتصال