புதுடெல்லி, டெல்லி
New Delhi, Delhi
இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் துண்டுகளை சிலர் திருடிச் செல்லும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்துள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி, கடந்த 2022 ஜனவரி முதல் 2026 மே மாதம் வரை 1.27 கோடிக்கும் அதிகமான பெட் சீட்கள், போர்வைகள் மற்றும் துணிகள் மாயமாகியுள்ளன.
இந்திய ரயில்வேயில் தினமும் சுமார் 8 லட்சம் ஏசி பயணிகள் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு கட்டணத்தில் இரண்டு பெட் சீட்கள், ஒரு போர்வை, ஒரு தலையணை, தலையணை உறை மற்றும் ஒரு முகத் துண்டு வழங்கப்படுகிறது.
ஆனால், சராசரியாக 1,000 பயணிகளில் ஒருவர் வழங்கப்படும் துணிப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரயில்வேயின் 69 கோட்டங்களில் 54 கோட்டங்கள் வழங்கிய தகவலின்படி, 2022-ஐ ஒப்பிடும்போது 2025-ல் இந்த திருட்டு சம்பவங்கள் 56% அதிகரித்துள்ளன. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் படுக்கை விரிப்பு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.104.51 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், இந்த திருட்டுகளைத் தடுக்க பல்வேறு கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ரயில்வே ஊழியர்கள் இதில் தொடர்புடையதாக எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தியா முழுவதும் நடந்த திருட்டுகளில் சுமார் 67% சம்பவங்கள் 10 முக்கிய ரயில்வே கோட்டங்களிலேயே பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், தெற்கு ரயில்வேயின் திருச்சி மற்றும் பாலக்காடு கோட்டங்களில் ஒரு துணி கூட திருடப்படாதது குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது