இந்தியா–வங்கதேச உறவை மீண்டும் சீரமைக்க இந்தியா ஏற்கெனவே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், இனி அதற்கு வங்கதேசம் பதிலளிக்க வேண்டிய நேரம் என்றும் முன்னாள் இந்திய தூதர் பினாக் ரஞ்சன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய வங்கதேச தேசியவாதக் கட்சி அரசு அமைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் தற்போதைய நிலை குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய அரசியல் சூழல் மாறுபட்டதாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தியா தரப்பில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட தூதரக நடவடிக்கைகளுக்கு வங்கதேசம் பதிலளிப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இணைப்பு திட்டங்களில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா முக்கியத்துவம் வாய்ந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா ஆற்றிய ஆகஸ்ட் 5-ம் தேதி உரை, இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நதிநீர் பங்கீடு உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளில் முன்னேற்றம் மெதுவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தின் பிராந்திய அரசியலில் சீனா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பங்கு முக்கியமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வங்கதேசம் வழியாக வங்காள விரிகுடாவை அணுகும் பாதையை உருவாக்க சீனா விரும்புவதாகவும், அதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெற்காசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், இந்தியா–வங்கதேச உறவு பாதுகாப்பு மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
