பிஷ்கெக்: பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-வது உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பயங்கரவாதம் மனிதகுலம் முழுவதற்கும் பெரும் சவாலாக நீடித்து வருவதாக அவர் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குதல், ஆள்சேர்ப்பு, தீவிரவாதமயமாக்கல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட அதன் முழு கட்டமைப்பையும் அழிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்தை கொள்கையின் கருவியாகப் பயன்படுத்தும் நாடுகளுக்கும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமும் ஆதரவும் அளிப்போருக்கும் வலுவான செய்தி அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பயங்கரவாதம் எந்த நாட்டுக்கும் வியூக ரீதியான சொத்தாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுவது, அமைதியான மற்றும் பாதுகாப்பான யூரேசியாவுக்கான முயற்சிகளுடன் தொடர்புடையது என்றும் மோடி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் மக்களின் மேம்பாடு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்கும் என்றும் கூறினார்.
ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் மோதலின் தாக்கம் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு, கடல்சார் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளிலும் எதிரொலிப்பதாக அவர் தெரிவித்தார். அனைத்து பதற்றங்கள் மற்றும் போர்களுக்கும் பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்றும் மோடி வலியுறுத்தினார்.
போதைப்பொருள் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள உறுப்பு நாடுகளிடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
