காஷ்மீரில் உள்ள மசூதிகளில் மத விவகாரங்களுடன் சமூகப் பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய பிரிவுகளின் மத அறிஞர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பள்ளத்தாக்கின் தலைமை மதகுரு மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மசூதிகளின் வழிபாட்டுத் தளங்களை சமூக நலனுக்கான தளங்களாகவும் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
போதைப் பொருள் பழக்கம், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் மனஅழுத்தம், தற்கொலை மற்றும் சுயதீங்கு, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இனி குறிப்பிட்ட நாட்களில் மசூதிகளில் எடுத்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வெள்ளிக்கிழமைகளில் ஒரே சமூகப் பிரச்சினையை பல மசூதிகளில் ஒரே நேரத்தில் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே குடும்பங்கள் கண்டறிவது, ஆலோசனை மற்றும் தொழில்முறை உதவியை நாடுவதில் உள்ள தயக்கத்தை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
மசூதிகளும் மதரஸாக்களும் வழிகாட்டுதல், ஆலோசனை, இளைஞர்களுடன் தொடர்பு, குடும்ப ஆதரவு மற்றும் சமூக நலப்பணிகளுக்கான மையங்களாக செயல்பட வேண்டும் என மத அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இளைஞர்கள் தங்கள் மனஅழுத்தம், தனிமை, பதற்றம் மற்றும் குடும்ப அழுத்தம் போன்ற பிரச்சினைகளை அச்சமின்றி பகிர்ந்து கொள்ளும் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் மதகுருமார்கள் உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நடவடிக்கைகளுடன் சுற்றுலா என்ற பெயரில் மதுபானக் கடைகளின் உரிமங்களை அதிகரிப்பது முரண்பாடாக இருப்பதாக மத அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மதுபானக் கிடைப்பை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
