புதுடெல்லி: அமெரிக்கர் உள்ளிட்ட 7 வெளிநாட்டினர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுகள் கைவிடப்படவில்லை என என்ஐஏ சிறப்பு அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான் டைக் கடந்த மார்ச் 13-ம் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அதே நாளில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மேலும் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த 7 பேர் மீதும் டெல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் தீவிரவாத தடுப்பு சட்டமான யுஏபிஏவின் பிரிவுகள் இடம்பெறவில்லை. இதனால் யுஏபிஏ பிரிவுகள் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து என்ஐஏ சிறப்பு அரசு வழக்கறிஞர் கூறுகையில், இதுவரை நடைபெற்ற விசாரணையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
யுஏபிஏ பிரிவுகளின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதும் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் என்ஐஏ சிறப்பு அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் யுஏபிஏ பிரிவுகள் இடம்பெறாதது, அந்தக் குற்றச்சாட்டுகள் முழுமையாக கைவிடப்பட்டதாக அர்த்தமல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.