சென்னை: குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு கட்டிடங்களை முறையாகப் பராமரித்து, தனியார் நிறுவனங்களின் தரத்துக்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என்றார்.
அனைத்து மாணவர்களும் விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டும் என்றும், இளைஞர்களை ஒழுங்குபடுத்துவதில் விளையாட்டுத் துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமுதன் மற்றும் தனுஷ் கொலை சம்பவங்களின் பின்னணியில் மது மற்றும் கஞ்சா இருப்பதாகக் கூறிய அவர், அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சாலைகளின் நிலையை மேம்படுத்துவதுடன், இயக்கத்தில் உள்ள பழுதடைந்த வாகனங்களை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த பிரேமலதா, குற்றவாளிகள் மீது முழுமையான விசாரணை நடத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
சில நாடுகளில் நடைமுறையில் உள்ளதைப் போன்று கடுமையான சட்டங்களையும் தண்டனைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமை குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.