சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலான மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறையில் நடைபெற வேண்டும் என்று இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
2026-27-ம் கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத நிலையில், நீட் தேர்வு தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை தமிழகத்துக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். கால்நடை மருத்துவக் கல்வி என்பது தொழில்சார் படிப்பு மட்டுமின்றி, கால்நடை பராமரிப்பு மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல தசாப்தங்களாக தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. எனவே, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கையை தொடர அனுமதிக்க வேண்டும் அல்லது மாணவர் சேர்க்கைக்கான அளவுகோல்களை மாநில அரசுகளே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பாதுகாக்கவும், மாநிலங்களின் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.