சென்னை: பொதுமக்கள் தங்களது மருத்துவப் பதிவுகளை ஒருங்கிணைத்து பாதுகாக்கும் ‘ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்’ (ABHA) கணக்கை தமிழக அரசு மருத்துவமனைகளிலேயே எளிதாகத் தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஹெல்த் அக்கவுண்ட் மூலம் நோயாளிகளின் மருத்துவ வரலாறு, பரிசோதனை முடிவுகள், மருந்து விவரங்கள் மற்றும் சிகிச்சை தொடர்பான தகவல்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாத்து, தேவையான நேரத்தில் மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
அரசு மருத்துவமனைகளில் ஆதார் அல்லது செல்பேசி எண்ணின் உதவியுடன் பொதுமக்கள் இலவசமாக ஹெல்த் அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் மருத்துவச் சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பெறுவதற்கு வசதி ஏற்படும்.
டிஜிட்டல் சுகாதார சேவைகளை மக்களிடம் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.