சென்னை: சென்னை வேளச்சேரியில் நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நேற்று தொடங்கியது. முதல் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷ், சகநாட்டு கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரினை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 47-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் இரு வீரர்களுக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டன.
மற்றொரு ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் நோதிர்பெக் அப்துசத்தோரோவ் மற்றும் அமெரிக்காவின் ஹான்ஸ் நீமன் மோதிய போட்டி 44-வது நகர்த்தலில் டிராவில் நிறைவடைந்தது.
இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி மற்றும் ரஷ்யாவின் டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் இடையேயான போட்டியும் 42-வது நகர்த்தலில் டிராவாக முடிந்தது.
கடந்த ஆண்டு சாலஞ்சர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் எம். பிரணேஷ், முதல் சுற்றில் பிரான்ஸின் அலிரேசா ஃபிரூஜாவை எதிர்கொண்டார். கருப்பு காய்களுடன் விளையாடிய அலிரேசா ஃபிரூஜா 79-வது நகர்த்தலில் வெற்றி பெற்று முழு ஒரு புள்ளியை கைப்பற்றினார்.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.