சென்னை: சென்னை மெட்ரோ ரயில் மற்றும் அதன் நிலைய வளாகங்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போனில் உரத்த குரலில் பேசுவது, ஸ்பீக்கர் மோடில் ஒலி ஒலிக்கச் செய்வது, ஹெட்போன் இல்லாமல் பாடல் அல்லது வீடியோ இயக்குவது போன்ற செயல்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.500-ல் இருந்து அதிகபட்சம் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
- மெட்ரோ ரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம், 2002 – பிரிவு 59-ன் படி, மற்ற பயணிகளின் வசதி மற்றும் அமைதிக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
- ரயில் மற்றும் நிலைய வளாகங்களில்:
- ஸ்பீக்கர் மோடில் செல்போன் பயன்படுத்துதல்,
- ஹெட்போன் இல்லாமல் பாடல்கள் அல்லது வீடியோக்களை ஒலிக்கச் செய்தல்,
- உரத்த குரலில் செல்போனில் பேசுதல்,
- அதிக சத்தம் ஏற்படுத்தும் மின்னணு சாதனங்களை பயன்படுத்துதல் ஆகியவை விதிமீறலாக கருதப்படும்.
அபராதம் உயர்வு
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஜூன் 19 அன்று வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின் படி, ‘ஜன் விஸ்வாஸ் சட்டம், 2026’ கீழ் இந்த திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி:
- அபராதம்: ரூ.500 → அதிகபட்சம் ரூ.2,500
- விதிமீறுபவர்களை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மெட்ரோ நிலையம் அல்லது ரயிலிலிருந்து உடனடியாக வெளியேற்றவும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
மெட்ரோ நிர்வாகத்தின் வேண்டுகோள்
அனைத்து பயணிகளும்:
- ஹெட்போன் அல்லது இயர்போன் பயன்படுத்த வேண்டும்.
- ஸ்பீக்கர் மோடில் பேசுவதையும், பாடல்/வீடியோ ஒலிக்கச் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
- அமைதியான மற்றும் பாதுகாப்பான பயணச் சூழலை பேண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.