சென்னை: தமிழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு நெல் மூட்டைக்கு ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் பணிகளில் விவசாயிகள் பல்வேறு முறைகேடுகளை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். லஞ்சம், எடை குறைப்பு, தரக்குறைவு என்ற பெயரில் தேவையற்ற பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் எந்தவித சிரமமும் இன்றி தங்களது விளைபொருட்களை அரசிடம் விற்பனை செய்யும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிப்படையான நடைமுறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.