திருவள்ளூரை அடுத்த ஈக்காடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது38). இவரது மனைவி வாணி. இவர்களது 6 வயது மகள் ஜஷ்வந்திகா என்ற மகள் இருந்தார். லோகநாதன் திருவள்ளூர் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார்.
மேலும் அவர், ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ. 15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் லோகநாதன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார். ஆனால் அதனை அவரால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் கடந்த ஒரு மாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் லோகநாதன், மகள் ஜஷ்வந்திகாவுடன் வெளியே செல்வதாக மனைவி வாணியிடம் கூறிவிட்டு சென்றார்.
பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. கணவர் லோகநாதனின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பதட்டம் அடைந்த வாணி தனது கணவர், மகள் மாயமானது குறித்து புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர்களை போலீசார் தேடிவந்தனர்.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் திருவள்ளூர்- புட்லூர் ரெயில் நிலையத்துக்கு இடையே லோகநாதன் தனது மகள் ஜஷ்வந்திகாவுடன் சேர்ந்து அவ்வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார்.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரின் உடல்களும் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து லோகநாதனின் மனைவி வாணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கணவர் மற்றும் மகளின் உடல்களை பார்த்து கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது. லோகநாதன், தனது மகள் ஜஷ்வந்திகா மீது மிகுந்த பாசம் வைத்து இருந்தார். இதனால் தற்கொலை முடிவை எடுத்த போது அவர் தனது மகளை விட்டு செல்லமனமின்றி அவளையும் உடன் அழைத்து சென்று இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் தொல்லை காரணமாக லோகநாதன், மகளுடன் சேர்ந்து ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்நது.
அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? லோகநாதன் யார்-யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி இருந்தார். யாரேனும் பணத்தை கேட்டு மிரட்டினரா? என்று அவரது செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லோகநாதனின் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.