எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு கால தாமதமாக நடத்தப்பட்டது. மாணவர் சேர்க்கையும் தாமதமாக நடந்தது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை முன் கூட்டியே அறிவித்தது. அதன்படி மே மாதம் 7-ந்தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வுக்கான தேதி முன் கூட்டியே அறிவிக்கப்பட்டதால் மாணவர்களும் அதற்கு தயாராகி வருகிறார்கள். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வை 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் எழுதுகிறார்கள். கடந்த ஆண்டை விட 5 ஆயிரம் பேர் அதிகம் எழுதுகிறார்கள்.
இவர்களில் மாணவிகள் 95 ஆயிரத்து 823 பேர். இது 65 சதவீதம் ஆகும். மாணவர்கள் 51 ஆயிரத்து 757 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இது 35 சதவீதம் ஆகும். திருநங்கை ஒருவரும் நீட் தேர்வு எழுதுகிறார். இந்தியா முழுவதும் மொத்தம் 1.4 லட்சம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 20.8 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 11.8 லட்சம் பேர் பெண்கள். மாணவர்களை விட மாணவிகள் 2.8 லட்சம் பேர் அதிக அளவில் தேர்வை எழுதுகிறார்கள். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 2.77 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுகிறார்கள்.