இத்தகைய காரணங்களால் கடந்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி தினமும் மின் தேவை முதல் முறையாக 17.584 மெகா வாட்டை எட்டியது. இதற்கு முன் கடந்த 29.4.2022-ல் 17,563 மெகாவாட் என்ற சாதனை அளவாக இருந்தது. விவசாயத்துக்கான 18 மணி நேர மின் வினியோகம் மற்றும் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவாக மார்ச் 15-ந் தேதி மின் நுகர்வு 18,053 மெகாவாட் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் ஏப்ரல் 7-ந் தேதி மீண்டும் தினசரி மின் நுகர்வு 18,252 மெகாவாட் அளவும், 18-ந் தேதி 18,882 மெகாவாட் அளவாகவும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. இந்த நிலையில் மின்தேவை மேலும் அதிகரித்து தமிழகத்தில் முதல் முறையாக புதன்கிழமை 19,087 மெகாவாட் அளவை (41.82 கோடி யூனிட்) எட்டியிருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். தினமும் மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இதில், விவசாயத்தின் பங்கு 7,500 மெகாவாட் என்ற அளவாக உள்ளது. இது கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரிக்கும், குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும் காணப்படும். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கால கோடை காலம் தொடங்கி விட்டதால் மின்சாதன பொருள்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும், விவசாய பிரிவுக்கு கூடுதலாக 7.27 மெகாவாட் செலவிடப்படுகிறது.