சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் மீன் தேவையை காசிமேடு மீனவர்கள் நிவர்த்தி செய்து வருகின்றனர். தினமும் அதிகாலை 2 மணி முதல் பரபரப்பாக காணப்படும் துறைமுகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பொதுமக்கள் மீன்களை மொத்தமாக வாங்கி செல்வார்கள். கூடை கூடையாக வந்து குவியும் பலவகை மீன்கள் ஏலத்தில் எடுத்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக விற்பார்கள். மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் இத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள 15 ஆயிரம் தொழிலாளர்கள் விசைப் படகு உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது தவிர மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளும், அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் வருவாய் இழப்புக்கு ஆளாகிறார்கள்.
மீன்பிடி தடைகாலத்தில் விசைப்படகுகளை பராமரிக்கவும், அதில் உள்ள பழுதுகளை சரிபார்க்கவும் செய்வது வழக்கம். விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மீன்வரத்து படிப்படியாக குறையும். ஆழ்கடலில் பிடித்து வரப்படும் மீன்கள் 2 மாதத்திற்கு தமிழகத்தில் கிடைக்காது. அதே நேரத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் வழக்கம் போல் மார்க்கெட்டுகளுக்கு வரும். ஆனால் காசிமேடு மீன்கள் மட்டும் கிடைக்காது. அதே நேரத்தில் கடலின் மேல் பகுதியில் உள்ள மீன்களை சாதாரண படகுகளில் சென்று மீன்பிடிக்கலாம். அதனால் கடலோரப் பகுதியில் உள்ளவர்கள் சிறிய படகுகளில் சென்று சிறு சிறு மீன்களை பிடித்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள். மீன்பிடி தடை காலம் தொடங்கி இருப்பதால் மீன் மார்க்கெட்டுக்கு காசிமேடு மீன்கள் இனி வராது. வரும் நாட்களில் மீன் விலை கடுமையாக உயரும். விரும்பிய மீன்களை வாங்க இயலாது. தெருக்களில் மீன் விற்கும் வியாபாரிகளும் குறைந்த அளவிலேயே மீன்களை விற்பனை செய்வார்கள்.