தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 'ருத்ரன்' படத்தின் இந்தி உள்ளிட்ட வடமொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் பெற்றிருந்தது. டப்பிங் உரிமைக்காக ரூ.12.25 கோடிக்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக முன்பணமாக ரூ.10 கோடி செலுத்திய நிலையில், மேலும் ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்ததாக, ரெவன்சா நிறுவனத்தின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24 -ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து 'ருத்ரன்' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை வேறு யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் இந்த பிரச்சினையை மத்தியஸ்தர்கள் மூலமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் படத்தை திரையரங்கம், ஓடிடி ஆகியவற்றில் வெளியிட விதிக்கப்பட்ட தடையையும் நீக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
'ருத்ரன்' திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு அதிக அளவு டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.