புதுடெல்லி: மேற்காசியாவில் நீடித்து வரும் மோதலுக்கு இடையே, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான கருத்து வேறுபாடுகளை சமரசப்படுத்தி, பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டு பிரகடனத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது.
புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பிரகடனத்தில் இடம்பெற வேண்டிய வார்த்தைகள் தொடர்பாக கடும் கருத்து வேறுபாடு நிலவியது.
இந்த நிலையில், இந்திய தூதர்கள் இரு தரப்பினருடனும் தீவிர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். சுமார் 100 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பிரகடனத்தின் மொழியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பேச்சுவார்த்தைகளுக்கு சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் ஆதரவு அளித்தன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இருதரப்பு சந்திப்புகளும் இந்த முயற்சிகளுக்கு பின்னணியாக அமைந்தன.
இதன் விளைவாக, மேற்காசியாவில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும் பிரிக்ஸ் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
எந்தவொரு நாட்டையும் நேரடியாகக் குறிப்பிடாமல், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது, சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளைப் பின்பற்றுவது உள்ளிட்ட அம்சங்களுக்கு பிரகடனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர்களிடையே நிலவும் முக்கியமான புவிசார் அரசியல் கருத்து வேறுபாட்டை சமாளித்து கூட்டு பிரகடனத்தை உருவாக்கியிருப்பது இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
