தாம்பரம்: உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மகளிர் மருத்துவத் துறை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பங்கேற்றனர். துறை பேராசிரியரும் தலைவருமான டாக்டர் ஏ.எம். அமலா ஹேசல் தொடக்க உரையாற்றினார்.
டாக்டர்கள் சி. சுஜிதர், என். சுமித்ரா ஆகியோர் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்குவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அதன்பிறகு, இணை உணவுடன் தாய்ப்பாலைத் தொடர்ந்து வழங்குவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறைகள், குழந்தை போதுமான அளவு பால் குடிப்பதை உறுதி செய்யும் அறிகுறிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் ஏற்படக்கூடிய மார்பக வீக்கம், காம்புகளில் வலி, பால் நாளங்களில் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை கையாளும் முறைகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கினர்.
நிகழ்ச்சியில் தாய்ப்பால் தானம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட மனிதப் பால் வங்கிகள் மூலம் தாய்ப்பால் தானம் செய்வதன் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் டாக்டர் ஜெ. லக்ஷண்யா நன்றி தெரிவித்தார்.