மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து என். சந்திரசேகரன் ராஜினாமா செய்துள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அவரது ராஜினாமா முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் குழுமத்தை தலைமை தாங்கி வழிநடத்தியது பெருமையும் மிகப்பெரிய பொறுப்புமாக இருந்ததாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அவரது தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரியில் முடிவடைய இருந்தது. தனக்குப் பிறகு தலைவர் பொறுப்பை ஏற்கும் நபரை விரைவில் தேர்வு செய்யுமாறு நிர்வாக வாரியத்திடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2027 பிப்ரவரிக்குப் பிறகும் சந்திரசேகரனை தலைவர் பதவியில் தொடரச் செய்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு ஒருமித்த ஆதரவு கிடைக்காததால், ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாக அவர் விளக்கியுள்ளார்.
ராஜினாமா அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து டாடா குழும நிறுவனங்களின் பங்குகளில் சரிவு காணப்பட்டது. டாடா பவர் பங்கு 1.26 சதவீதமும், டிசிஎஸ் பங்கு 3.9 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்கு 1.83 சதவீதமும் சரிந்தன.
1987-ல் டாடா குழுமத்தில் பணியைத் தொடங்கிய என். சந்திரசேகரன், 2009-ல் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், 2017-ல் டாடா சன்ஸ் தலைவராகவும் பொறுப்பேற்றார்.