கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து கபினி அணையிலிருந்து 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையிலிருந்தும் தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை தமிழகத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும், காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கபினி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், அது மட்டும் போதுமானதல்ல என்றும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் உரிய அளவில் நீர் திறக்கப்பட்டால்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் தேவைகள் பூர்த்தியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறுவை மற்றும் சம்பா சாகுபடிகளை பாதுகாக்க, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும், இதற்காக தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி உரிய நீரை பெற்றுத் தர வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
விவசாயிகளின் நலனையும், தமிழகத்தின் நீர்ப்பாசன தேவைகளையும் கருத்தில் கொண்டு, காவிரி நீர் விநியோகத்தில் தாமதம் ஏற்படாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.