சென்னை: தமிழகத்தில் மின் நுகர்வு மற்றும் உச்ச மின் தேவை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தொடர்ந்து நிலவும் அதிக வெப்பநிலை, தொழில்துறை மின் பயன்பாடு மற்றும் வீடுகளில் குளிர்சாதன வசதிகளின் அதிகரித்த பயன்பாடு ஆகியவை மின் தேவையை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 475.447 மில்லியன் யூனிட்களை எட்டி, இதற்கு முன் பதிவான அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. அதேபோல், உச்ச மின் தேவை 21,724 மெகாவாட் வரை உயர்ந்து புதிய சாதனையாக பதிவாகியுள்ளது.
மின் தேவை தொடர்ந்து அதிகரித்தாலும், காற்றாலை மற்றும் சூரிய மின்சார உற்பத்தி, அனல் மின் நிலையங்கள் மற்றும் மத்திய மின் ஒதுக்கீடு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் மாநிலம் முழுவதும் தடையற்ற மின்விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் நாட்களில் பரவலான மழை பெய்யும் பட்சத்தில் வெப்பநிலை குறைவதன் காரணமாக மின் தேவை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும், இருப்பினும் தேவைக்கேற்ப போதிய மின்சாரம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மின்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.