கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை மீண்டும் திருப்பி அனுப்பிய மத்திய அரசு

 

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு தயாரித்த விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது.


வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், இந்த இரு திட்டங்களையும் இரண்டாவது முறையாக பரிசீலித்த பிறகும் ஒப்புதல் வழங்கவில்லை. நகரங்களின் மக்கள் தொகை, எதிர்பார்க்கப்படும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் பயண நேரக் குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் மெட்ரோ திட்டத்துக்கு போதுமான ஆதாரமாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டாலும் பயண நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறைவு ஏற்படாது என்றும், அதற்கு மாற்றாக பேருந்து போக்குவரத்து அமைப்பை மேலும் வலுப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.


முன்னதாகவும் இந்த திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தமிழக அரசு கூடுதல் விளக்கங்களுடன் மீண்டும் மத்திய அரசிடம் அனுப்பியிருந்தது. இருப்பினும், மறுபரிசீலனைக்குப் பிறகும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை.


சென்னைக்கு அடுத்ததாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், மத்திய அரசின் சமீபத்திய முடிவால் இந்த இரு நகரங்களுக்கான மெட்ரோ திட்டங்கள் மீண்டும் தாமதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال