ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் இலக்குகள் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் மாயமாகியுள்ளார். மேலும், சிலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், அவரது உத்தரவின் பேரில் அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) ஈரானின் இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. இந்த நடவடிக்கை, ஈரானின் ராணுவ திறனை பலவீனப்படுத்துவதற்கும், ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் திறனை குறைப்பதற்குமானதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடைய இலக்குகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் உலகளாவிய எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலையும் உயர்வை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
