புதுடெல்லி: நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் உறுதியளித்தார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர், தேர்வுத் தாள் கசிவு என்பது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் மிகக் கடுமையான குற்றம் என்று குறிப்பிட்டார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதில் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தேர்வுத் தாள் கசிவுகளைத் தடுப்பது மத்திய அரசின் பொறுப்பு மட்டுமல்ல; மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாணவர்களின் நலனே அரசின் முதன்மை என்றும், தேர்வுகளில் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் வெளிப்படையான மற்றும் நம்பகமான அமைப்பை உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.