நடைப்பயிற்சிக்கு சென்ற தொழிலதிபர் காரில் கடத்தல்: 4 பேர் கைது

 

சென்னை:


சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அதிகாலை நடைப்பயிற்சிக்காக சென்ற தொழிலதிபர் ஒருவரை முகமூடி அணிந்த கும்பல் காரில் கடத்தி, ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


போலீஸார் தெரிவித்ததாவது, நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தொழிலதிபரை காரில் வந்த மர்மநபர்கள் வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி, கத்திகளைக் காட்டி மிரட்டினர். பின்னர் ரூ.50 லட்சம் பணம் கேட்டதுடன், அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியையும் பறித்துள்ளனர். மேலும், பணத்தை ஏற்பாடு செய்து தருமாறு கூறி பின்னர் அவரை விடுவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


பாதிக்கப்பட்ட தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகள் பணத்தை பெற வரும்போது போலீஸார் வலைவீசி 4 பேரையும் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 3 கத்திகள் மற்றும் பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال