வீட்டு மின் இணைப்புகளுக்கான அதிகப்படியான மின் கட்டணம் தொடர்பாக மாநிலம் முழுவதும் எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) விரிவான ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
மின் பயன்பாட்டில் அசாதாரண வேறுபாடு காணப்பட்ட சுமார் 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இணைப்புகள் அனைத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு, மீட்டர் பதிவுகள், மின் பயன்பாட்டு விவரங்கள் மற்றும் கட்டணக் கணக்கீடுகள் சரிபார்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வின் போது மீட்டர் வாசிப்பு பிழை, கணக்கீட்டு தவறு அல்லது தொழில்நுட்ப காரணங்களால் அதிக கட்டணம் விதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அதனை உடனடியாக திருத்தி நுகர்வோருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் நுகர்வோர் அளித்துள்ள புகார்களுக்கு முன்னுரிமை வழங்கி, களத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டு விரைவாக தீர்வு காணுமாறு அனைத்து மண்டல மற்றும் பிரிவு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன், நுகர்வோர் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் ஆய்வு மற்றும் திருத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், ஆய்வின் முடிவின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.