சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிலவும் குறைபாடுகளை விரைவாக கண்டறிந்து சரிசெய்ய 304 சிறப்பு அதிகாரிகளை நியமிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரத் துறை அனைத்து இயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
- மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 304 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மருத்துவமனை அளவிலான குறைபாடுகளை நேரடியாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.
- அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், தங்கள் மாவட்ட அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து, மாவட்ட சுகாதார அதிகாரிகள், இணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி டீன்கள் மூலம் குறைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குறைபாடுகளை சரிசெய்வதற்கு முன் மற்றும் பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- மருத்துவமனைகளில் சுகாதார வசதிகள், குடிநீர், கழிப்பறை, பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள்:
- சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இதயவியல் பிரிவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை.
- எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போதிய பயிற்சி இல்லாமை, சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றதாகவும் புகார்கள்.
- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. உபகரணங்கள் பற்றாக்குறையால் தினமும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுவது.
- நோயாளிகள் மற்றும் உயிரிழந்தோரின் உறவினர்களிடம் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்டோர் பணம் கேட்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்.
- ராயப்பேட்டை, ஸ்டான்லி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளிலும் இதேபோன்ற பிரச்சினைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
- வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் எலிகள், நாய்கள் மற்றும் பாம்புகள் நடமாடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த அனைத்து குறைபாடுகளையும் உடனடியாக சரிசெய்து, அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை, சுத்தமான சூழல் மற்றும் பாதுகாப்பான சேவையை உறுதி செய்ய சிறப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.