2030-31 வரை தொடரும் பிரதமர் கிசான் திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

 

புதுடெல்லி:


விவசாயிகளுக்கு வருமான ஆதரவு வழங்கும் பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டம் 2030-31 நிதியாண்டு வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க ரூ.3.16 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி, தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.


இதுவரை 23 தவணைகளின் மூலம் ரூ.4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. சமீபத்திய தவணையின் மூலம் 9.49 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.


பெண் விவசாயிகளுக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், விவசாய முதலீட்டை ஊக்குவிக்கவும், முறைசாரா கடன்களைச் சார்ந்திருப்பதை குறைக்கவும் இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Previous Next

نموذج الاتصال