No results found

    மலேசியாவில் ரூ.1½ லட்சத்துக்கு விற்கப்பட்ட தமிழக பெண்- அதிகாரிகள் நடவடிக்கையால் மீட்பு


    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவரை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, சென்னையை சேர்ந்த முத்து ஆகியோர் மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக கூறி அங்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் வீட்டு வேலை செய்ய சொல்லி மகேஸ்வரியை அடித்து கொடுமைப்படுத்தினர். ரூ.1.26 லட்சத்திற்கு தன்னை விற்றுள்ளது மகேஸ்வரிக்கு தெரியவந்தது.

    இது பற்றி தனது உறவினர்களிடம் தெரிவித்து அவர் கதறினார். மேலும் தன்னை சொந்த ஊருக்கு மீட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து அவரை மீட்பதற்காக உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார்கள். மேலும் சேலம் சரக டி.ஐ.ஜி. உமாவிடம் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மகேஸ்வரியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் மகேஸ்வரி மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். காலையில் விமானம் சென்னை வந்தடைந்தது. பின்னர் மகேஸ்வரி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் அவரை உறவினர்கள் வரவேற்றனர். அப்போது மகேஸ்வரி உறவினர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

    பின்னர் அவர் தனது உறவினர்களுடன் சேலம் வந்து அங்கு டி.ஐ.ஜி. உமாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    முன்னதாக மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், தனக்கு மலேசியாவில் நல்ல வேலை இருப்பதாக அழைத்து சென்று கழிவறையை கழுவ சொன்னதுடன் அங்கு அடித்து கொடுமைப்படுத்தினர். இதனால் எனக்கு தற்போது வரை காது சரியாக கேட்காத நிலை உள்ளது. எனவே இதற்கு காரணமான முகமது அலி, முத்து, அருள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال