பலன்: நோய்கள் அகலும்
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புணைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவற்கு
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே,
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.
பொருள்:
இப்பாடல், இதற்கு முந்திய பாடல் இரண்டிலும், பட்டர், அபிராமியை தவிர வேறொருவரை வணங்கமாட்டேன் என்கிறார். வேண்டுவனவற்றை அளிக்கும் சிந்தாமணி அன்னை அபிராமி. "தரித்ராணாம் சிந்தாமணி குண நிகா" என்று சௌந்தர்ய லஹரி 3-வது ஸ்லோகத்தில் (அவித்யனாம்...) அன்னையின் பாத தூளி கேட்பவர்களுக்கு கேட்டதை அளிக்கும் சிந்தாமணி குவியல் என்று சங்கரர் கூறியுள்ளார். ஒரு சிந்தாமணி இருந்தாலே எல்லாவற்றையும் அளித்துவிடும். இங்கே அன்னையின் பாத தூளியே, சிந்தாமணி குவியல். அப்போ அன்னை எப்படிப்பட்டவள்?
- அன்னை மணி போல் உயர்ந்தவள்.
- அந்த மணியாகிய ரத்தினத்தின் ஒளி அவளே.
- ஒளிர்கின்ற ரத்தினங்கள் ஒன்றாய் தொடுத்த அணிகலன் அவளே.
- அணிகின்ற அந்த அணிகலனின் அழகும் அன்னையே.
- அவளை அணுகாமல் ஒருவர் இருந்தால், அவர் பிணியால் பீடிக்கப்பட்டவர் ஆவார். அந்த பிணியும் அவளே.
- அவர்கள் திருந்தி அன்னையை அணுகினால், அவருக்கு பிணியை களைந்து அறுத்துவிடுபவள் அன்னையே. அதனால் அந்த பிணிக்கு மருந்தும் அவளே.
- தேவர்களுக்கு அன்னையே சிறந்த பரிசாவாள். தேவேந்த்ரனுக்காக பல சமயங்களில் அருள் செய்துள்ளாள்.
இப்படிபட்டவளான அபிராமியின் தாமரை பாதங்களை விடுத்து வேறொன்றையும் பணிய மாட்டேன்.
பாடல் (ராகம்-ஜெயந்தஸ்ரீ, தாளம்-ஆதி) கேட்க
