பலன்: அசையா சொத்துக்கள் (வீடு, நிலம்) போன்றவை கிட்டும்.
உறைகின்ற நின் திருக்கோவில் - நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே
பொருள்:
பூரணாசல - நிறைந்த குன்று
மங்கலை - மங்களம் நிறைந்தவள்
அன்னையே, நீ என்றும் நிறைந்தவள். மங்களமே வடிவானவள் (பவானி, சிவானி என்ற பெயர்கள் மங்கள வடிவை குறிக்கின்றன). நீ எங்கு இருக்கிறாய்? நின் கணவர் (கேள்வர்) சிவனின் ஒரு பாகத்திலா? அல்லது நான் மறையின் ஆதியில் அல்லது முடிவில்? அமுதம் பொழியும் வெண்மையான சந்திரனிலா? அல்லது (கஞ்சம் - தாமரை) தாமரையிலா? அல்லது எனது நெஞ்சத்திலா? அல்லது செல்வமெல்லாம் மறைந்திருக்கும் பாற்கடலிலா? எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கிறாய். அதனால், எதில் என்று குறிப்பாக சொல்ல முடியாது.
பாபநாசம் சிவன், தனது உன்னை அல்லால் வேறே கதி இல்லை அம்மா என்ற கல்யாணி ராக பாடலில், சரணத்தில் எங்கும் நிறைந்தவள் என் மனக்கோவிலில் எழுந்தருளிய தாயே. என்று கற்பகாம்பாளை பாடியுள்ளார்.
பாடல் (ராகம் - ஜயமனோஹரி, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க
