பிரதமர் மோடி- சுந்தர் பிச்சை சந்திப்பு: குஜராத்தில் கூகுள் ஃபின்டெக் மையம் திறப்பதாக அறிவிப்பு


அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், ஏஎம்டி சிஇஓ லிசா சு, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடியை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். பின்னர், இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம் என சுந்தர் பிச்சை கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின்போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக நாங்கள் பிரதமருடன் பகிர்ந்து கொண்டோம். குஜராத்தின் கிப்ட் நகரில் எங்களின் உலகளாவிய ஃபின்டெக் (fintech) செயல்பாட்டு மையத்தை திறப்பதை நாங்கள் அறிவிக்கிறோம். டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு அவரது காலத்தை விட முன்னோடியாக இருந்தது. இதனை மற்ற நாடுகள் செய்ய விரும்பும் ஒரு வரைபடமாக நான் இப்போது பார்க்கிறேன்" என்றார்.

Previous Next

نموذج الاتصال