கர்நாடக தேர்தல்: பாஜக கோரிக்கையை ஏற்று போட்டியில் இருந்து விலகிய அதிமுக


கர்நாடகாவில் வருகிற 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ம் தேதி நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அதிமுக விலகியதுடன். தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளது. இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை இன்று (24.04.2023 - திங்கட் கிழமை), பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கர்நாடக மாநிலத்தில் 10.05.2023 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், (159) புலிகேசிநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கழக வேட்பாளர் டி.. அன்பரசன் அவர்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தலைமை பரிசீலனை செய்து, பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான டி. அன்பரசன் அவர்கள் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال