No results found

    வருமான வரித்துறை சோதனை விவகாரம்: எந்த சவாலையும் சந்திக்க தயார்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி


    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் திருச்சி தூய வளனார் கல்லூரி மைதானத்தில் எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற தலைப்பில் தமிழக முதல்வரின் வரலாற்று புகைப்பட கண் காட்சியை கடந்த 23-ந்தேதி நடிகர் பிரபு திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து கண்காட்சி நிறைவு நாளான இன்று தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- தலைவர் மு.க.ஸ்டாலின் வரலாற்றை சொல்லும் இந்த புகைப்பட கண்காட்சி சென்னையில் முதலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் மதுரை, கோவையில் நடந்தது. இப்போது திருச்சியில் 9 நாட்களாக நடைபெற்று இருக்கிறது.

    திருச்சி மாவட்டத்தில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள். அமைச்சர் நேரு கடைசி நாளில் நீங்கள் வந்து பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று இன்று பார்வையிட வந்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு அனுபவம் ஏற்படுகிறது. இது தலைவரின் 50 ஆண்டு கால உழைப்பு. முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் உழைப்பு, உழைப்பு என பாராட்டு பெற்றவர் நமது தலைவர். அந்த உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக சான்றாக இந்த கண்காட்சி விளங்குகிறது இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள் ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.

    சிறப்பான ஏற்பாடுகளை செய்து அமைச்சர் நேரு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், எந்த சவாலையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் கொண்டு வந்த மிசாவுக்கும், தற்போதைய பா.ஜ.க. அரசு நடத்தும் வருமான வரித்துறை சோதனைக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் 31 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அடுத்த வருடத்திற்குள் பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்படும். சேலத்தில் ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்ட ஸ்டேடியம் மாதிரி அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்து 7 நாட்கள் தான் ஆகிறது. நானும் அடுத்தடுத்த பயணங்களில் இருக்கிறேன். ஒவ்வொரு அறிவிப்பும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் பார்வையிட்டனர்.

    Previous Next

    نموذج الاتصال