முன்னாள் பா.ஜ.க. பெண் மந்திரி மாயா கொத்னானி, விசுவ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஜெய்தீப் படேல், பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபு பைராங்கி உள்பட எஞ்சிய 67 பேர் மீதான வழக்கு அகமதாபாத்தில் உள்ள தனிக்கோர்ட்டில் (சிறப்பு புலனாய்வுக்குழு வழக்குகள்) நடந்து வந்தது. இந்த வழக்கை முதலில் நீதிபதி எஸ்.எச்.வோரா விசாரித்தார். அவர் ஐகோர்ட்டு நீதிபதி ஆனதைத் தொடர்ந்து, ஜோத்ஸ்னா யாக்னிக், கே.கே.பட், பி.பி. தேசாய் ஆகிய 3 நீதிபதிகள் அடுத்தடுத்து விசாரித்த நிலையில் ஓய்வு பெற்றனர். அதைத் தொடர்ந்து நீதிபதி எம்.கே. தவே விசாரித்தார். அவர் இட மாற்றம் செய்யப்பட்டார்.
கடைசியாக நீதிபதி எஸ்.கே. பாக்சி விசாரித்தார். எனவே இந்த வழக்கை மொத்தம் 6 நீதிபதிகள் விசாரித்துள்ளனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் 187 சாட்சிகள், கோர்ட்டுக்கு வரவழைத்து விசாரிக்கப்பட்டனர். இதேபோன்று, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் அப்போதைய பா.ஜ.க. மூத்த தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா உள்பட 57 சாட்சிகள் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்த நிலையில், 20-ந் தேதி (நேற்று) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கில் நேற்று நீதிபதி எஸ்.கே.பாக்சி தீர்ப்பு வழங்கினார். அவர், முன்னாள் பா.ஜ.க. பெண் மந்திரி மாயா கொத்னானி, விசுவ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஜெய்தீப் படேல், பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபு பைராங்கி உள்பட எஞ்சிய 67 பேர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று தீர்மானித்து, விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை 2010-ம் ஆண்டு தொடங்கி, 13 ஆண்டுகள் நடந்ததும், சம்பவம் நடந்து 21 ஆண்டுகளுக்குப்பிறகு தீர்ப்பு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.