அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்று முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்திற்கு வந்தார். அவருக்கு மேளதாளம் முழங்க அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து, இன்று காலை சேலம் அண்ணா பூங்கா மணி மண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதிய ஜனதா என்பது ஒரு தேசிய கட்சி. அந்தக் கட்சியுடன் கூட்டணி குறித்து தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருப்பதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்தில் இணைய அழைப்பு விடுத்துள்ளோம். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை. எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். சோதனைகள் வந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.