No results found

    சென்னை சித்தர்கள்: மயிலை குருஜி


    இரவில் தூங்க போகும் போது மிகுந்த நம்பிக்கையுடனும், காலையில் எழுந்திருக்கும் போது அளவு கடந்த மகிழ்ச்சியுடனும் யார் ஒருவர் திகழ்கிறாரோ அவர் இல்லற வாழ்விலே இருந்து கொண்டு சித்தராக வாழும் மாமனிதர் என்று சொல்வார்கள். அப்படி வாழ்வதற்கு இருந்தும், இல்லாமல் இரு என்று அர்த்தம் உண்டு. எல்லோராலும் இருந்தும் இல்லாமல் இருக்கவே முடியாது. அந்த நிலைக்கு உயர வேண்டுமானால் மனதை மிகவும் பக்குவப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். சித்தர்களில் எத்தனையோ பேர் சாதாரண மனிதராக வாழ்ந்து பிறகு மிக மிக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள்.

    சென்னையில் அப்படி வாழ்ந்தவர்தான் மயிலை குருஜி என்ற சித்தர் பெருமான். இவரது பூர்வீகம் அணைகட்டா புதூர் என்ற கிராமம் ஆகும். இவரது தந்தை அஞ்சலக அதிகாரியாக பணியாற்றியவர். இடமாறுதல் காரணமாக ஒவ்வொரு ஊர்களாக சென்று பணி புரிந்து வந்தார். அந்த அஞ்சலக அதிகாரிக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு தட்சிணாமூர்த்தி என்று பெயர் சூட்டி என்று வளர்த்து வந்தனர். ஆனால் அவரை தட்சிணாமூர்த்தி என்று யாரும் அழைப்பதில்லை. சுந்தர ராமன் என்றே அழைத்து வந்தனர். மயிலாப்பூரில் வாகனங்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை சுந்தர ராமன் தொடங்கி நடத்தி வந்தார்.

    சுந்தர ராமனுக்கு சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் மீது அவர் அளவு கடந்த பக்தி வைத்திருந்தார். இதனால் அடிக்கடி திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபடும் வழக்கத்தை அவர் வைத்து இருந்தார். 1946ம் ஆண்டு சிவராத்திரி தினத்தன்று திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக சுந்தர ராமன் சென்றிருந்தார். அப்போது சன்னதியில் அவருக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. அங்குதான் தங்கால் மவுன குரு சுவாமிகளை சுந்தரராமன் முதன் முதலாக சந்தித்தார். ஏழுமலையானை வழிபடுவதற்காக சுந்தர ராமன் நின்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் மவுன குரு சுவாமிகள் நின்று கொண்டிருந்தார். அப்போது வாசி யோகத்தின் மூலம் பெருமூச்சு விடும் சத்தம் கேட்டது. இதனால் சுந்தர ராமன் பின்புறமாக திரும்பி பார்த்தார். அங்கு வெள்ளை நிற உடையில் தாடியை சுருட்டி கட்டியபடி தங்காள் மவுன குருசுவாமிகள் நின்றிருந்தார்.

    அப்போது அவர் வாசி யோகம் செய்தபடி இருந்தார். மவுன குரு சுவாமிகளின் வாசி யோகம் சுந்தர ராமனுக்கு சிறு இடையூறாக இருந்தது. ஏழுமலையானை ஒருமித்த மனதுடன் வழிபட இயல வில்லையே. வாசி யோகம் சத்தம் தனது கவனத்தை சிதறடிக்கிறதே என்று சுந்தர ராமன் நினைத்தார். அடுத்த நிமிடம் மவுன குரு சுவாமிகள் சுந்தர ராமனை பார்த்து சிரித்தபடியே நீங்கள் நினைப்பது போல உங்கள் வழிபாட்டை தடுப்பது என் நோக்கமல்ல. நீங்கள் தாராளமாக ஏழுமலையானை வழிபடுங்கள் என்று கூறி விட்டு சென்றார். இதை கேட்டதும் சுந்தர ராமனுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. நமது மனதுக்குள் இருப்பதை இவர் சொல்கிறார் என்றால் நிச்சயமாக மிகப்பெரிய மகானாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதோடு அவருக்கு இன்னொரு அனுபவமும் ஏற்பட்டது.

    திருப்பதி ஆலயத்துக்குள் சுந்தர ராமன் எங்கெல்லாம் செல்கிறாரோ அவர் பின்னாலேயே தங்கால் மவுன குரு சுவாமிகளும் சென்றபடியே இருந்தார். இதை கவனித்த சுந்தர ராமன், “ஐயா உங்களை பார்த்தால் மிகப்பெரிய மகான் போல் தெரிகிறது. என்னை ஏன் பின் தொடர்ந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மவுன குரு சுவாமிகள், “நீங்கள் ஏழுமலையானை வழிபடும் விதத்தை எனது ஆன்ம சக்தியால் பார்த்தேன். உங்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யவில்லை. மற்றவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்தீர்கள். இது உயர்ந்த மனது. இதை அறிந்துதான் நான் உங்கள் பின்னால் வருகிறேன். நீங்கள் என்னோடு வர முடியுமா?” என்று கேட்டார். ஒரு மிகப்பெரிய மகான் தன்னை பார்த்து தன்னோடு வர முடியுமா என்று கேட்டதும் சுந்தர ராமனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆன்மீகத்தில் தனக்கு வழிகாட்டப் போகும் குரு இவர்தான் என்று அந்த இடத்திலேயே முடிவு செய்தார். அடுத்த நிமிடமே தனது சம்மதத்தை தெரிவித்தார். இதனால் அன்றே மவுன குரு சுவாமிகளின் சீடராக சுந்தர ராமன் மாறினார். சுந்தர ராமனை தங்கால் கிராமத்திற்கு மவுன குரு சுவாமிகள் அழைத்து சென்றார். அங்கு தன்னோடு அமர வைத்து தவம் செய்யும் வழிமுறைகளை கற்பித்து கொடுத்தார். அது மட்டுமின்றி ஏராளமான அற்புதங்களையும் சுந்தர ராமனுக்கு நிகழ்த்தி காட்டினார். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக சுந்தர ராமன் கற்றுக் கொண்டார். தங்கால் பகுதிக்கு அருகே உள்ள தைலாரம்மன் மலையில் மவுன குரு சுவாமிகள், சுந்தர ராமனுக்கு நிறைய சித்துக்களை கற்றுக் கொடுத்தார். அவை அனைத்தையும் மிக எளிதாக மிக குறுகிய காலத்தில் கற்றுக் கொண்ட சுந்தர ராமன் மயிலாப்பூருக்கு வந்து தனது கடையை நடத்திக்கொண்டே இறை பணிகளையும் செய்து கொண்டே இருந்தார். அவரது ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் பரவ தொடங்கியது. இதனால் அவரை தேடிநிறைய பேர் வர ஆரம்பித்தனர்.எப்போதும் கடையில் சுந்தர ராமனை சந்தித்து தங்களது பிரச்சினைகளை சொல்லுவார்கள். அடுத்த நிமிடம் சுந்தர ராமன் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை சொல்லுவார். இப்படி சுந்தர ராமனிடம் பிரச்சினைகளை சொல்லி ஆயிரக்கணக்கானவர்கள் பரிகாரம் தேடிக் கொண்டனர். ஒரு காலக்கட்டத்தில் சுந்தர ராமன் மயிலாப்பூரில் உள்ள கடையை விட்டு விட்டு தங்கால் கிராமத்தில் மவுன குரு சுவாமிகளுடன் சேர்ந்து இறை பணிகளை செய்து வந்தார். அந்த சமயத்தில் மவுன குரு சுவாமிகளுக்கே குருவாக மாறிய ஒரு அற்புதமும் நடந்தது. ஒரு தடவை மவுன குரு சுவாமிகளுக்கு அம்மை நோய் தாக்கியது. இதனால் அவரது இரண்டு கண்களின் பார்வையும் பறிபோய்விட்டது. திடீரென தனது பார்வை போய்விட்டதால் மவுன குரு சுவாமிகள், சுந்தர ராமனை அழைத்து, “நீ குமாரதா என்னும் இடத்துக்கு செல். அங்கே எனது குருநாதர் சித்தரஞ்சன் சாட்டர்ஜி இருக்கிறார். அவரை சந்தித்து எனக்கு பார்வை பறிபோன விசயத்தை சொல். அவர் உரிய தீர்வு சொல்லுவார்” என்று அனுப்பி வைத்தார். அதன்படி சுந்தரராமன், மகான் சித்தரஞ்சன் சாட்டர்ஜியை சந்தித்தார். சுந்தர ராமனை அந்த மகான் சுந்தரராம் குருஜி என்று அழைத்தார். அன்று முதல் சுந்தரராமனின் பெயர் சுந்தரராம் குருஜி என்று மாறியது. சித்தரஞ்சன் சாட்டர்ஜி சில விஷயங்களை சுந்தரராம் குருஜியிடம் சொல்லி கொடுத்தார். அதன்படி தங்கால் கிராமத்துக்கு திரும்பி வந்த சுந்தரராம் குருஜி தான் கற்ற சக்தி மூலம் தனது குரு மவுன குரு சுவாமிகளுக்கு சிகிச்சை செய்ய தொடங்கினார். இதனால் 7வது நாள் மவுன குரு சுவாமிகளுக்கு மீண்டும் பார்வை வந்தது. தனக்கு பார்வை அளித்த தனது சீடனை கட்டி அணைத்து மவுன குரு சுவாமிகள் ஆசீர்வாதம் செய்தார். சுந்தரராம் குருஜியின் மேன்மையை உணர்ந்து அவருக்கு மேலும் பல சக்திகளை அருளினார். குறிப்பாக கூடு விட்டு கூடு பாயும் முறை, யந்திரங்கள் எழுதும் முறை, யந்திரம், தந்திரம், யந்திரம் போன்றவற்றை பயன்படுத்துவது எப்படி? மூலிகை மருந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பன போன்றவற்றையெல்லாம் சொல்லி கொடுத்தார். இதனால் சுந்தரராம் குருஜி மேலும், மேலும் சக்தி பெற்ற சித்த புருஷராக மாறினார். மயிலாப்பூரில் இருந்து கொண்டே அவர் ஏராளமானோருக்கு சேவை செய்தார். அவரை அறிந்தவர்கள் அடிக்கடி அவரை தேடி வந்து ஆத்ம ஞானம் பெற்று சென்றனர். மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் ஜெயராம் விலாஸ் என்ற இடம் இருந்தது. அங்குதான் சுந்தரராம் குருஜி வசித்து வந்தார். மயிலாப்பூரில் வசித்ததால் அவருக்கு மயிலை குருஜி என்ற பெயரும் ஏற்பட்டது. நாளடைவில் தட்சிணாமூர்த்தி, சுந்தரராம் என்ற பெயர்கள் மறைந்து மயிலை குருஜி என்ற பெயரே நிரந்தரமாக நிலைத்து போனது. தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், தீர்க்க முடியாத நோய் போன்றவற்றையெல்லாம் ஒரு நொடி பொழுதில் தீர்க்கும் வல்லமையை மயிலை குருஜி பெற்றிருந்தார். சென்னையில் கோல விழியம்மன் கோவில் புகழ் பெறுவதற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் மயிலை குருஜிதான். அதுபோல காஞ்சிபுரத்தில் ஸ்ரீகனக துர்க்கையம்மன் ஆலயம் இவரது முயற்சியால்தான் உதயமானது. வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகலேண்டஸ்வர் உள்ள கருவறையில் மூல விக்ரகம் பல ஆண்டுகளாக இல்லாமலேயே இருந்தது. மயிலை குருஜி மீண்டும் முயற்சி செய்து அந்த கருவறைக்குள் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். கணக்கில் அடங்காத ஆலயங்களை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளார். இதனால் இவரை கும்பாபிஷேக முனிவர் என்று கூட சொல்வார்கள். மரணமடைந்தவர்களை தட்டி எழுப்புவது என்பது மிக மிக உயர்ந்த சித்த புருஷர்களால் மட்டுமே முடியும் என்று சொல்வார்கள். அந்த அற்புதத்தையும் மயிலை குருஜி சுவாமிகள் ஒரு தடவை நிகழ்த்தி காட்டினார். சென்னை அருகே திருவாலங்காடு என்னும் இடத்தில் ஏழை தொழிலாளி ஒருவரது மனைவியை பாம்பு கடித்து விட்டது. உடல் முழுவதும் நீலம் பாய்ந்த நிலையில் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அவளை பரிசோதித்த டாக்டர்கள் பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே அந்த பெண் இறந்து விட்டதாக சொன்னார்கள். இதனால் அந்த பெண்ணின் உடலை ஒரு கட்டிலில் கிடத்தி கிராம மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிரே மயிலை குருஜி சுவாமிகள் வந்து கொண்டிருந்தார். என்ன நடந்தது என்று விசாரித்தார். பிறகு அந்த பெண்ணின் உடலை கீழே இறக்கி வைக்கும்படி கூறினார். தனது குருவை நினைத்து சில மந்திரங்களை சொன்னார். பின்னர் ஒரு தேங்காயை உடைத்து அதில் இருந்து நீரை எடுத்து அந்த பெண்ணின் மீது தெளித்தார். அடுத்த வினாடி அந்த பெண் கண் திறந்து பார்த்தார். அந்த கிராமமே அவருக்கு நன்றி சொன்னது. இப்படி எண்ணற்ற அற்புதங்களை மயிலை குருஜி சுவாமிகள் செய்திருப்பதாக இப்போதும் செவி வழி செய்திகள் உள்ளன. நிறைய பேர் மயிலை குருஜி சுவாமிகள் பற்றி பல்வேறு விசயங்களை தெரிவிக்கிறார்கள். மயிலாப்பூரில் வசிப்பவர்கள் பலர் மயிலை குருஜி சுவாமியுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் சொல்லும் தகவல்களும் ஆச்சரியப்படுத்துகின்றன. ஆனால் எந்த ஒரு தகவலும் ஆவணப்படுத்தப்படவில்லை. ஏனெனில் அதற்கு ஆதாரம் இல்லை என்று சொல்கிறார்கள். 1999ம் ஆண்டு தனது குரு நாதரின் 28ம் ஆண்டு குருபூஜையை தங்காலில் நடத்திய மயிலை குருஜி சுவாமிகள் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தார். 11.05.1999 அன்று திருப்பதியிலேயே முக்தி அடைந்தார். அவரது ஸ்தூல திருமேனியை அவரது குடும்பத்தினரும், பக்தர்களும் தங்காலில் உள்ள ஆசிரமத்துக்கு எடுத்து வந்தனர். அங்கு அவரது குருவாகிய மவுன குரு சுவாமிகள் ஜீவ சமாதிக்கு அருகிலேயே மயிலை குருஜி சுவாமிகள் ஜீவ சமாதி செய்யப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பூரட்டாதி நட்சத்திர தினத்தன்று மயிலை குருஜி சுவாமிகளுக்கு குரு பூஜை நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த புதன் கிழமை மயிலை குருஜி சுவாமிகளின் 22ம் ஆண்டு குரு பூஜை நடத்தப்பட்டது.

    Previous Next

    نموذج الاتصال