இந்த அடையாள உரிமை சீட்டு இருந்தால்தான் பொதுச்செயலாளர் தேர்தலில் ஓட்டு போட உரிமை உண்டு. தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்டத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை தொகுதிகளுக்கு உட்பட்ட தொண்டர்களுக்கு புதிய அடையாள உரிமை சீட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விருகை வி.என்.ரவி வழங்கினார். அவர் பேசும்போது தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி நமது மாவட்டம் முதலிடத்தில் இருக்க வேண்டும், பாராளுமன்ற தேர்தல் பணியையும் இப்போதே பகுதி வட்ட வாரியாக தொடங்கி பணியாற்றி வெற்றி இலக்கை எட்ட வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சாமிநாதன், கடும்பாடி, எ.எம்.காமராஜ், சி.கே.முருகன், சைதை சுகுமார், ஷேக் அலி, கதிர் முருகன், வெற்றிவேல், வக்கீல் பழனி எஸ்.எம்.சரவணன், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, எஸ்.பி.குமார், இனியன், விருகை தர்மர், வைகுண்ட ராஜன், சுரேஷ், வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்க தீவிர பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இதற்கான பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்துடன் எடப்பாடி பழனிசாமி படமும் பொறிக்கப்பட்டு அடையாள உரிமை சீட்டு என புதிதாக வழங்கப்பட்டு வருகிறது. முன்பகுதியில் உறுப்பினர் உரிமை சீட்டு எனவும் அமைதி, வளம், வளர்ச்சி என்றும் பின்பகுதியில் அ.தி.மு.க. உறுப்பினர் பெயர், வார்டு எண், பகுதி, மாவட்டம், வயது, பாலினம், வரிசை எண், சேர்ந்த ஆண்டு என குறிப்பிடப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையொப்பமும் இடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.