No results found

    பெண் போலீசாருக்கு 9 புதிய அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்


    தமிழக காவல்துறையில் இந்த ஆண்டு பெண் போலீசின் பொன்விழா ஆண்டு ஆகும். 1973-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தான் தமிழக காவல்துறையில் பெண் போலீசாரை நியமித்தார். முதன் முதலில் பெண் போலீஸ் தொடங்கப்பட்டபோது அதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஏட்டு, 20 போலீசார் அடங்கிய சிறிய படை மட்டுமே இருந்தது. அந்த பெண் போலீஸ் படைக்கு முதல்-சப் இன்ஸ்பெக்டராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி ஏற்றார். 22 பேருடன் தொடங்கப்பட்ட பெண் போலீஸ் தற்போது 35 ஆயிரத்து 329 பேருடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்த பெண் போலீசில் ஒரு டி.ஜி.பி., 2 கூடுதல் டி.ஜி.பி.க்கள், 14 ஐ.ஜி.க்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழக காவல் துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னை பெரியமேடு, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலையில் நடந்தது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதன்பிறகு பெண்களின் பாதுகாப்பிற்காக 'அவள்' திட்டம் தொடங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'அவள்' திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தின் சின்னத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் பேருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவள் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களை காவல் பணியில் சேர்க்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை அதாவது அரசாணை எண் 2382, நாள் 5.9.1973-ன் மூலம் முதலமைச்சர் கலைஞர் வெளியிட்டார். அதன் விளைவாக, ஓர் உதவி ஆய்வாளர் மற்றும் 21 பெண் காவலர்கள் 27-12-1973 அன்று பணியில் சேர்க்கப்பட்டார்கள். தி.மு.கழக ஆட்சியில் பெண்கள், காவலர்கள் தொடங்கி எஸ்.பி, டி.ஐ.ஜி, ஐ.ஜி, காவல்துறை கூடுதல் இயக்குநர், காவல்துறை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் என எல்லா நிலைகளிலும், தமிழ்நாடு காவல் துறையில் இன்று 35,329 பெண் காவல் ஆளினர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    கலைஞர் தொடங்கி வைத்த ஒரு சகாப்தத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவில், அவரது மகனான நான் முதலமைச்சராக வந்து கலந்துகொள்வது எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பெருமையாக, பெரும் பேறாக நான் கருதுகிறேன். பொன்விழா கொண்டாடும் நாளில் பெண் காவலர்களுக்கு நவரத்தினம் போன்று ஒன்பது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை தற்போது வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

    1. பெண் காவலர்கள், குடும்பத்தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியையும் செய்து வருவதால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, 'ரோல்-கால்' எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, இனிமேல் காலை ஏழு மணி என்பதற்கு பதிலாக, எட்டு மணி என்று மாற்றியமைக்கப்படும்.

    2. சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும். 

    3. அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும். 

    4. பெண் காவலர்கள், காவல் நிலையங்களில் பணிக்கு வரும்போது, தங்களது குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரக்கூடிய சூழலை உணர்ந்து, சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதை முழு அளவில் மேம்படுத்திச் செயல்படுத்தும் விதமாக, விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும், காவல் குழந்தைகள் காப்பகம்" அமைக்கப்படும். 

    5. பெண் காவல் ஆளினர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் விதமாக, பெண்களை முதன்முறையாக காவல் பணியில் ஈடுபடுத்திய கலைஞரது நினைவாக, அவரது பெயரில் "கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும்" ஆண்டுதோறும் வழங்கப்படும். 

    6. ஆண் காவலர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறும் இன்றைய சூழ்நிலையில், பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் பல பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருப்பதால், அவர்களது குடும்பச் சூழலுக்கு ஏற்ப, விடுப்பு, பணியிட மாறுதல் வழங்குமாறு, காவல் உயர் அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும். 

    7. பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும்போட்டி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். அதேபோல், தேசிய பெண் காவலர்களுக்கு இடையே யான துப்பாக்கிச்சுடுதல் போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும். 

    8. பெண் காவல் ஆளினர்களின் தேவைகள், பிரச்சினைகள், செயல்திறன் பற்றி கலந்தாலோசனை செய்யும் விதமாக, "காவல் துறையில் பெண்கள்" எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும். 

    9. பெண் காவல் ஆளினர்கள் தங்கள் பணி முறையை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ளும் விதமாகவும், குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் விதமாக, டி.ஜி.பி. அலுவலகத்தில் "பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு" ஒன்று அமைக்கப்படும். இந்த அறிவிப்புகள் உங்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தித்தரும் என்று நம்புகிறேன். 


    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Previous Next

    نموذج الاتصال