அவர்கள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு -பிரியா பவானி சங்கர்


சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர். இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், "எல்லாரும் அவங்க வேலைய பார்த்துட்டுப் போறப்போ, ticket இருக்குல்ல, ஏன் உள்ள விட மாட்டேங்கிறீங்கன்னு கேட்ட அந்த குரல் தான் இது போன்ற செயலுக்கு எதிரான முதல் குரல். அவங்க உடை தான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சனைனா, அவர்கள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் பேரில் ரோகிணி திரையரங்க ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Next

نموذج الاتصال