பொதுவாக 8 என்ற கூட்டுத்தொகை வரும் எண்ணை யாரும் விரும்பி பதிவு செய்வதில்லை. அந்த கூட்டுத்தொகை வரும் வாகன எண்களை வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களில் பேக்லாக் என்று தனியாக வைத்துவிடுவார்கள். அந்த எண்களை யாரும் கேட்காததால் அதை பெரிதுபடுத்த மாட்டார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி, அந்த எண்களில் பிஎஸ்-4 வாகனங்களை முறைகேடாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மென்பொருள் நிறுவன முன்னாள் ஊழியர்கள் ஒரு சேர்ந்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சென்னை, கோவை, நாமக்கல் பகுதிகளில் அதிக அளவு பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்களை பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தணிக்கை செய்யும்போது 8 கூட்டுத்தொகை கொண்ட பதிவெண்களில் வாகனங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததும், அதுபற்றி விசாரித்தபோதுதான், இந்த முறைகேடு தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து தமிழக அரசு, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பிஎஸ்-4 வகை வாகனங்கள் 8 கூட்டுத்தொகை வரும் எண்ணில் பதிவு செய்தவர்கள் யார்? விற்பனையாளர், வாங்கியவர், பதிவு தேதி உள்ளிட்ட விவரங்களை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் முழு விவரங்கள் கிடைக்கப்பெற்றதும், வாகன பதிவில் எத்தனை கோடி மோசடி நடந்துள்ளது? என்பது தெரியவரும். தடை செய்யப்பட்ட பிஸ்-4 வாகனங்களை பதிவு செய்த இந்த முறைகேடு, தமிழகம் மட்டுமமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.