இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா 2023 மே மாதம் நடைபெறும்- பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Google Tamil News


இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த மாதம் 8-ந் தேதி மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். கடந்த மாதம் மன்னர் சார்லஸ் அரியணையில் அமரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்ற பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து அரச குடும்பம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா 6 மே 2023 சனிக்கிழமையன்று நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ், மனைவியும் ராணியுமான கமீலா பார்கருடன் முடிசூட்டப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல் ஏந்தி மன்னர் மூன்றாம் சார்லஸ் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு மன்னருக்கு புனித எட்வர்ட் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து நாட்டு மக்களுக்கு மன்னர் உரையாற்றுவார். இதன் பிறகு அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். 74 வயதாகும் சார்லஸ் இங்கிலாந்து வரலாற்றில் முடிசூட்டிக் கொள்ளும் மிக வயதான மன்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Previous Next

نموذج الاتصال